திருமணமான தம்பதிகளுக்கு, அதிலும் முக்கியமாக ஒரு பெண்ணிற்கு, வாழ்வின் மிகக் கடினமான மற்றும் வேதனையைத் தரக்கூடிய ஒரு முடிவு கருக்கலைப்பு ஆகும்.
கருக்கலைப்பு என்பது மருத்துவரீதியாக ஒரு கருவை அழிப்பதே ஆகும். இதை மருத்துவம் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ செய்வர். கருக்கலைப்புக்கான பாதுகாப்புகள் மற்றும் செயல்முறைகள், கர்ப்பத்தின் மூன்றுமாத காலகட்டத்தை பொறுத்து மாறும். கருக்கலைப்பு செயல்முறைகளை கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் விரைவாக செய்துமுடித்தால், கருக்கலைப்பினால் உண்டாகும் சிக்கல்களை தவிர்க்கலாம்.
பல விதங்களிலும் கருக்கலைப்பு பாதுகாப்பானதாகவே இருப்பினும், அதனால் வரும் பக்க விளைவுகள் சில பெண்ணை பாதிக்கும். அவற்றுள் சில - கடுமையான இரத்தப்போக்கு, இடுப்பு கோளாறுகள், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். மேலும் அதிகப்படியான இரத்த இழப்பு, காய்ச்சல் மற்றும் தீவிர வலி ஏற்படும்பொழுது மருத்துவரை அணுகுவதே சிறந்ததாகும்.
எதிர்கால கருத்தரித்தல் அல்லது பெண்ணின் கருத்தரித்தல் தன்மையை, கருக்கலைப்பு எவ்விதத்திலும் பாதிக்காது. எனவே மருத்துவரின் உதவியோடு செய்யப்படும் கருக்கலைப்பு பாதுகாப்பானதே ஆகும்.
- கருக்கலைப்பு என்றால் என்ன? - What is an abortion in Tamil
- கருக்கலைப்பின் வகைகள் - Types of abortion in Tamil
- கருக்கலைப்புக்கான நேர வரம்பு - Time limit for abortion in Tamil
- பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு - Safe and unsafe abortion in Tamil
- கருக்கலைப்பிற்கான காரணங்கள் - Causes of abortion in Tamil
- கருக்கலைப்பு செயல்முறைகள் - Abortion procedure in Tamil
- கருக்கலைப்பின் பக்க விளைவுகள் - Side effects of abortion in Tamil
- கருக்கலைப்பினால் ஏற்படும் சிக்கல்கள் அல்லது ஆபத்துகள் - Risks or complications of abortion in Tamil
- கருக்கலைப்புக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் - Chances of getting pregnant after abortion in Tamil
- கருக்கலைப்பு பற்றிய இந்திய சட்டம் - Indian law on abortion in Tamil
கருக்கலைப்பு என்றால் என்ன? - What is an abortion in Tamil
கர்ப்பத்தின் வளர்ச்சியை நிறுத்துவதே கருக்கலைப்பு ஆகும். ஒரு பெண்ணின் வயிற்றில் உருவாகும் கருவை அகற்றுதல் அல்லது வெளியேற்றுதல் கருக்கலைப்பு ஆகும். இயற்கையான முறையில் கருச்சிதைவு ஏற்படுவதாலும் தூண்டப்படுவதாலும் கரு வெளியேற்றப்படுகிறது.
கருக்கலைப்பின் வகைகள் - Types of abortion in Tamil
இயற்கையாக நடந்ததை அல்லது தூண்டப்பட்டு வருகிறதா என்பதை அடிப்டையாகக் கொண்டு, கருக்கலைப்பு இரண்டு வகைப்படும்
தன்னிச்சையான அல்லது இயற்கை கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்களினால் கருவானது இறந்துவிடும். இதை தன்னிச்சையான அல்லது இயற்கை கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவு என்று கூறுகின்றனர்.
தூண்டப்பட்ட கருக்கலைப்பு
மருத்துவரீதியாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ ஒரு கருவை வெளியேற்றுவது தூண்டப்பட்ட கருக்கலைப்பு ஆகும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பினால், கருவை சுமக்கும் தாயின் ஆரோக்கியத்திற்கும், வாழ்விற்கும் ஆபத்து நேரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கருக்கலைப்புக்கான நேர வரம்பு - Time limit for abortion in Tamil
இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, கருவுற்ற முதல் இரண்டு மும்மாத காலத்திற்குள் (20 வாரங்கள்) மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு பாதுகாப்பானது. இந்த நேர வரம்பிற்கு மேல் செய்யும் கருக்கலைப்பினால் பல சிக்கல்கள் ஏற்படும் என்றும் அது கருக்கலைப்பு செயல்முறையை மேற்கொள்ளும் பொழுதோ மேற்கொண்ட பின்னரோ ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.
பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு - Safe and unsafe abortion in Tamil
முன்பு கூறியது போலவே, கர்ப்பத்தின் முதல் இருபது வாரங்களில் அல்லது இரண்டாம் மும்மாத கர்ப்ப காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு மிகவும் பாதுகாப்பானதே ஆகும். இரண்டாம் மும்மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு கருவானது வேகமாக வளர ஆரம்பித்து விடும் என்பதால், இரண்டாம் மும்மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு மிகவும் ஆபத்து நிறைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கும். இந்நேரங்களில் கருக்கலைப்பு பாதுகாப்பற்றது ஆகும். எனவே, கருக்கலைப்பு மேற்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை ஒரு பெண் தன் மூன்றாம் மும்மாத கர்ப்ப காலத்திற்குள் செல்வதற்கு முன்பாகவே தீர்மானிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
மருத்துவ ரீதியாக மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பாக இருந்தாலும், அறுவை சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பாக இருந்தாலும், அந்த செயல்முறையை மேற்கொள்ளும் மருத்துவமனையில் போதிய வசதிகள் உள்ளதா என்பதை தரம் பார்க்க வேண்டியது மிக முக்கியம் ஆகும். கருக்கலைப்பை செய்கிறவர்கள் தகுதியான மருத்துவராக அல்லது மகளிர் மருத்துவ வல்லுநராக இருத்தல் அவசியம். மேலும் அவர்கள் தரமான கருக்கலைப்பு மாத்திரைகளை பரிந்துரைப்பவர்களாகவும் அறுவை சிகிச்சையை முறைப்படி சரியாக செய்பவராகவும் இருத்தல் வேண்டும். கருக்கலைப்பு முறைக்கு விஜயம் செய்ய இது ஒரே முக்கிய மையமாக இருக்க வேண்டும். மருத்துவமனையில் நோய் தொற்றுக்களைத் தடுக்க போதிய நோய்க் கிருமிகளை ஒழிக்கும் செயல்முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
கருக்கலைப்பிற்கான காரணங்கள் - Causes of abortion in Tamil
இயற்கையான கருச்சிதைவு மற்றும் தூண்டப்பட்ட கருக்கலைப்புக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விரிவாக கீழே காணலாம்
தூண்டப்பட்ட கருக்கலைப்பு
தூண்டப்பட்ட கருக்கலைப்பு என்பது கருவைத் தாங்கும் தாய் மற்றும் கருக்கலைப்பு செயல்முறையை கையாளும் மருத்துவர் என இருவர் மட்டுமே தீர்மானித்து மேற்கொள்ளப்படுவது ஆகும். எனவே இது தனிப்பட்ட காரணங்கள் அல்லது சமூக மற்றும் மருத்துவ காரணங்களைச் சார்ந்ததாகும். மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 14 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் , கருக்கலைப்பிற்கான காரணங்களை கீழே வரிசைப் படுத்தி உள்ளனர்
- இரு குழந்தைகளுக்கு நடுவில் தேவைப்படும் இடைவெளி காரணமாக
ஒரு பெண்ணிற்கு இரு கர்ப்பத்திற்கு நடுவில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவைப்படுகிறது என மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் பரிந்துரைக்கின்றனர். இதைக் காரணமாகக் கொண்டு சமீபத்தில் பிள்ளைப்பேறு பெற்ற தாய் மீண்டும் கருவுற்றால், போதிய இடைவேளை வேண்டிய காரணத்தால் கருக்கலைப்பிற்கு உடன் போக வேண்டி உள்ளது.
- தேவையற்ற கர்ப்பம்
சில பெண்கள் கவனக்குறைவால் கர்ப்பம் ஆகிறார்கள் என ஆய்வு கூறுகிறது. இதை தேவையற்ற கர்ப்பம் என கருதி கருக்கலைப்பு செய்கின்றனர். கவனக்குறைவால் மட்டும் அல்லாது பாதுகாப்பற்ற பாலியலாலும், கருத்தடை முயற்சி தோல்வியுற்றதாலும் இவ்வாறு தேவையற்ற கர்ப்பம் உருவாகிறது. பல பெண்கள் தூண்டப்பட்ட கருக்கலைப்பை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம் ஆகிறது.
- பொருளாதார சிக்கல்கள்
ஒரு குழந்தையை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தந்தைக்கும் மிக முக்கியமான பல பொறுப்புகள் உள்ளன. ஒரு குடும்பத்தை நல்ல முறையில் நடத்த போதிய வருமானம் தேவைப்படுகிறது. பல குடும்பங்களின் வருமானங்கள் போதிய அளவில் இல்லாததாலும் பிறக்கும் குழந்தைக்கு நல்லதோர் எதிர்காலத்தைக் கொடுக்க முடியாத காரணத்தாலும் கருக்கலைப்பு செய்கின்றனர் தம்பதியினர்.
- வேலைவாய்ப்பு முடிவுகள்
கருவுற்றிருக்கும் ஒரு தாயின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை - என இரண்டுமே மிக பெரிய மாற்றங்களை சந்திக்கும். தொழில்முறை இலக்குகள் மற்றும் குறிக்கோள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களுக்கு அவற்றை சிறிது மாற்றி அமைக்க பெரிதும் சிரமப்படுவர். வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணத்தில் படிப்பிற்கும், வேலைக்கும், தொழிலுக்கும், குறிக்கோள்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கருக்கலைப்பு செய்ய முன்வருகின்றனர்.
- வாழ்க்கைத் துணையுடனான பிரச்சனைகள்
திருமணமான தம்பதிகள் பலரின் கருத்தும் ஒன்றே ஆகும். அது தாங்கள் இருவரும் கருவுற்றிருப்பதாகவும், பிறக்கும் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு இருவரையும் சார்ந்ததாகும் என்றும், இந்த பயணத்தில் இருவரின் பங்கும் சரி சமமானது என்பதும் ஆகும். இருப்பினும், ஒரு சில பெண்கள், மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கை, கர்ப்பம் தொடர்பான கருத்து வேறுபாடு, நிதி பாதுகாப்பின்மை, அல்லது விவாகரத்து போன்ற காரணங்களால் கருக்கலைப்பு மேற்கொள்கின்றனர்.
- மிக இளம் வயது
ஒரு பெண் கர்ப்பம் தரிக்க அவளது உடலும் மனமும் தகுதியான நிலையில் இருத்தல் வேண்டும். ஆனால் சில பெண்கள் இளம் வயதிலேயே கர்ப்பம் ஆகிறார்கள். எனவே அவர்களின் உடல்நிலை சரிவர இல்லாத காரணத்தினாலும், பிறக்கும் குழந்தையை சரியாக வளர்க்க முடியாத காரணத்தினாலும் கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- திருமணத்துக்கு முன் ஏற்படும் கர்ப்பம்
இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் தங்கள் திருமணத்திற்கு முன் கர்ப்பம் தரிக்க அனுமதி இல்லை. திருமணத்திற்கு முன் ஏற்படும் கர்ப்பம் தவறான ஒரு செயல் ஆகவே கருதப்பட்டு வருகிறது என்பதால் பல நாடுகளில் இதற்கு தடையும் விதிக்கப் பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி, ஒரு சில தருணங்களில், ஒரு பெண், திருமணத்திற்கு முன் கர்ப்பமானால், அவள் கருக்கலைப்புக்கு உட்புகுத்தப்படுவதோடு மட்டும் அல்லாது மன ரீதியான சித்திரவதைக்குள்ளும் அவள் தள்ளப் படுவாள். சில கலாச்சாரங்களில், இவ்வாறு கர்ப்பம் ஆவது அசிங்கமாகவும், 'கெட்ட நடவடிக்கையின்' அறிகுறியாகவும் கருதப்படுகிறது.
- சுகாதார அபாயங்கள்
கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பதாலும் அல்லது கருவை சுமக்கும் தாயின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதாலும், கருவை கலைத்துக் கொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். அவரின் பரிந்துரைப்படி,கருக்கலைப்பு மேற்கொள்ளப்படும்.
- குடும்பம் அல்லது உடன் இருப்போரின் தாக்கங்கள்
ஒருவரின் சுற்றமும் அவர் வாழும் சூழலும் அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுபோல ஒரு பெண் தன் உறவினர்களாலோ, நண்பர்களாலோ அல்லது குடும்பத்தினராலோ பாதிக்கப்படுகிற சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளில், கருக்கலைப்பு செய்து கொள்ள அவள் முன்வருகிறாள். எனவே இவ்வாறு முடிவு எடுப்பதற்கு முன்பாக ஆலோசகரிடமோ அல்லது ஒரு மகளிர் மருத்துவ வல்லுநரிடமோ ஆலோசனை கேட்பது என்பது வாழ்வின் முக்கிய முடிவுகளை உண்மையாக நல்ல முறையில் எடுக்க உதவியாக இருக்கும்.
- ஆண் பிள்ளை வேண்டும் என்ற ஆசை
இந்திய மற்றும் பல ஆசிய நாடுகளிலும் மிகப் பெரிய குற்றமாகக் கருதப்படுகிற கருக்கலைப்புக்குக் காரணம், பல தருணங்களில், தனக்கு ஆண் மகன் வேண்டும் என்ற ஆசையினால் தான். இந்த முடிவானது குடும்பத்தாரால் எடுக்கப்படுகிறது. சில நேரங்களில் தாய், தந்தையின் ஒப்புதல் இல்லாமலேயே நடத்தப்படுகிறது.
தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவுகள்
தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவுகளுக்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒரு பெண்ணின் ஆரோக்கியம் பாதிப்படைவது என்பது மிக முக்கியமான ஒன்று ஆகும்.
- மரபணு கோளாறுகள் அல்லது அசாதாரணங்கள்
ஒரு செயலற்ற அல்லது மறைவான (மறைக்கப்பட்ட) மரபணு அசாதாரணங்கள் அல்லது கோளாறுகளைக் கொண்ட பெற்றோர், அந்த மரபணுவைத் தன் குழந்தைக்கும் கொடுக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், அவ்வாறு மரபணு அசாதாரணங்கள் உள்ள பெற்றோர், கர்ப்பமாகும் பொழுது, இயற்கையாகவே கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
- நோய் தடுப்பு காரணங்கள்
சில தருணங்களில், ஒரு தாயின் வயிற்றில் உள்ள கருவை, அப்பெண்ணின் நோய் எதிர்ப்பு அமைப்பானது எதிரியாகக் கருதி, கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
த்ரோம்போபிலியா என்று கூறப்படும் இரத்தம் உறைவால் ஏற்படும் கட்டிகள் நஞ்சுக்கொடியில் உருவாகக் கூடும். இதன் விளைவாக, கருவிற்கு செல்லக்கூடிய பிராணவாயுவின் அளவு குறையும் பொழுது, அதுவே கருச்சிதைவுக்கு காரணமாக மாறுகிறது.
- சுரப்பியின் கோளாறுகள்
சுரப்பியின் கோளாறுகளான தைராய்டு சுரப்புக் குறை (போதுமான அளவு தைராய்டு இயக்குநீர் சுரக்கப்படாததால், தைராய்டு இயக்குநீரின் செயல்பாடு அல்லது அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ஏற்படும் கோளாறு), அதிக அளவிலான சீரம் தைராய்டு பிறபொருள் எதிரிகள், அதிக அளவிலான தைராய்டு சுரக்கும் சுரப்பி (டிஎஸ்ஹெச்) இருப்பினும் தைராய்டு பிறபொருள் எதிரிகளின் இல்லாமை மற்றும் பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் எனப்படும் சினைப்பைக் கட்டிகள்) போன்ற சில சுரப்பியின் கோளாறுகள் காரணமாக கருச்சிதைவு ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- தவறான கருத் தேர்வு
கருவானது குறைபாடோடு இருந்தால் அல்லது குறைந்த தரத்தோடு இருந்தால் அது, கரு பதித்தலுக்கு ஏற்ற கருவாக இருக்காது. இக்காரணத்தினால் கருவானது இயல்பான நிலையில் வளர முடியாத நிலை ஏற்படும். இதுவே கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
- வாழ்க்கை முறை
பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திட சத்துள்ள உணவுகளை உண்ணுவதும் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். மேலும், புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை விடுத்து வாழ்வதும் நல்லது. இவற்றை கடைபிடித்து வாழும் பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இவ்வாறு இல்லாத பெண்ணின் ஊட்டச்சத்து மற்றும் நோய் தடுப்பு தேவைகள் பூர்த்தி அடையாத நிலையில் அப்பெண்ணின் வயிற்றில் உருவாகும் கரு சிதைய வாய்ப்புகள் அதிகம்.
- கருப்பை குறைபாடுகள்
கருப்பொருளின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுக் குறைபாட்டால், கருப் பதித்தலின் தரம் குறையும். மேலும், சிசுவிற்கு பரிமாற்றப்படும் ஊட்டச்சத்தின் அளவானது குறைவதோடு கழிவுகளின் நீக்கம் குறைக்கப்படுவதால் சிசு இறந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதுவே கருச்சிதைவுக்கு காரணமாகிறது.
கருக்கலைப்பு செயல்முறைகள் - Abortion procedure in Tamil
கருக்கலைப்பு செயல்முறைகள் இரண்டு விதமாக மேற்கொள்ளப்படுகிறது - மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை. நடைமுறைகள் இரண்டும், முதல் மும்மாத கர்ப்ப காலத்திற்கும் இரண்டாவது மும்மாத கர்ப்ப காலத்திற்கும் வேறுபடும்.
முதல் மும்மாத கர்ப்ப காலம்
கர்ப்பத்தின் முதல் பதின்மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு முதல் மும்மாத கருக்கலைப்பு ஆகும். இரண்டாம் மும்மாத கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பை விட முதல் மும்மாத கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளும் கருக்கலைப்பு பாதுகாப்பானது என்பதால் பல கருக்கலைப்புக்கள் இக்காலகட்டத்தில் நடத்தப்படுகிறது.
- மருத்துவக் கருக்கலைப்பு
மருத்துவர் பரிந்துரைக்கும் கருக்கலைப்பு மாத்திரைகள் மூலம் நடைபெறும் கருக்கலைப்பை மருத்துவக் கருக்கலைப்பு என்பர். இந்த மருந்துகள் வாய்வழியாக எடுத்து கொள்ளப்படும் அல்லது யோனியில் வைக்கப்படலாம் அல்லது இரண்டுமே மேற்கொள்ளப்படும். உடலில் ஏற்படும் உடனடி மாற்றத்தை கண்காணிக்க இந்த செயல்முறையை மருத்துவமனையில் செயல்படுத்துவர். எனினும், மருத்துவரின் ஆலோசனைப்படி இதனை வீட்டில் இருந்தபடியே செய்யவும் முடியும்.
- அறுவை சிகிச்சை மூலம் செய்யும் கருக்கலைப்பு
அறுவை சிகிச்சை மூலம் செய்யும் கருக்கலைப்பில் உறிஞ்சும்-மீதம் என்னும் முறையைக் கையாளுகின்றனர். வலி தெரியாமல் இருப்பதற்காக உள்ளூர் அல்லது பொது மயக்க மருந்து அல்லது தூக்க மருந்து கொடுத்து இந்த செயல்முறையை நடத்துகின்றனர். இம்முறையில், மருந்துகள் அல்லது கருவிகளைக் கொண்டு கருப்பை வாய் தளர்த்தப்படும். கருப்பை வாய் போதுமான அளவிற்கு தளர்த்தப்பட்ட பிறகு, ஒரு உட்செலுத்து குழாய், கருப்பை வழியாக கருமுட்டையை அணுகும். பின்னர் இந்த குழாய் ஒரு வெற்றிடத்துடன் இணைக்கப்பட்டு, கருப்பை சுவரில் இருந்து கருவை உறிஞ்சி வெளியேற்ற உதவும்.
இந்த செயல்முறை முடிவடைந்தபிறகு, மருத்துவர் ஒரு சில வலி நிவாரணியை பரிந்துரைப்பார். இந்த செயல்முறை நடைபெற்ற பிறகு, இரு வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது சிறந்தது ஆகும். எஞ்சிய கருவின் பகுதிகள் உள்ளதா என்பதை அறிய இந்த பரிசோதனை உதவும். பக்க விளைவுகள் அல்லது தொற்றுக்கள் உள்ளதா என்பதை அறியவும் உதவியாக இருக்கும்.
இரண்டாம் மும்மாத கர்ப்ப காலம்
கர்ப்பத்தின் பதின்மூன்று வாரங்கள் மற்றும் இருபது வாரங்களுக்கு நடுவே மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு இரண்டாம் மும்மாத கருக்கலைப்பு ஆகும். முதலாம் மும்மாத கருக்கலைப்பைப் போலவே இதிலும் மருத்துவம் மூலமாக அல்லது அறுவை சிகிச்சை மூலமாக கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் மும்மாத கருக்கலைப்பில், மருத்துவத்தை காட்டிலும் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பே குறைவான சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- மருத்துவக் கருக்கலைப்பு
மருத்துவக் கருக்கலைப்பு மருத்துவமனையில் மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாய்வழியாகக் கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில், யோனியில் மாத்திரை வைப்பது அல்லது நரம்பு வழியாக மருந்தை செலுத்துவது மூலமாகவும் கருக்கலைப்பு நடத்தப்படுகிறது. இந்த மருந்துகளை கொடுத்து பன்னிரண்டு மணிநேரங்களுக்கு பிறகு மருந்தின் விளைவைக் காணமுடிகிறது. கருப்பையானது சுருங்கியும் விரிந்தும், கருவை வெளியேற்ற வழிவகுக்கும்.
இரண்டாம் மும்மாத கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பு மிகுந்த வலியைக் கொடுக்கும் என்பதால் மருத்துவர்கள் வலி நிவாரணிகளை பரிந்துரைப்பார்கள்.
- அறுவை சிகிச்சை மூலம் செய்யும் கருக்கலைப்பு
இரண்டாம் மும்மாத கர்ப்ப காலத்தில், விரிவாக்கம் மற்றும் வெளியேற்றம் மூலம் கருக்கலைப்பதே சிறந்த செயல்முறை ஆகும். அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்னே, பெண்ணின் கருப்பையின் வாயை தளர்த்த, மருந்துகள் கொடுக்கப்படும். அறுவை சிகிச்சை நாளன்று, தளர்த்தும் கருவிகளை கொண்டு கருப்பையின் வாயானது மேலும் தளர்த்தப்படும். வலி தெரியாமல் இருக்க உள்ளூர் அல்லது பொது மயக்க மருந்து கொடுக்கப்படும். உறிஞ்சும் குழாய் கொண்டு, கர்ப்பப்பையில் உள்ள கருவை வெளியேற்றுவார்கள்.
கருக்கலைப்பின் பக்க விளைவுகள் - Side effects of abortion in Tamil
கருக்கலைப்பு செயல்முறைகளை செய்து முடித்த பிறகு, ஒரு சில பெண்கள், கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அல்லது எல்லாவற்றையும் உணருவர்
- குமட்டல் மற்றும் வாந்தி
மருத்துவமனையில் கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொண்டு செயல்படுத்தப்பட்ட கருக்கலைப்புகளால் பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- அதிகமான இரத்தப் போக்கு
கருக்கலைப்பு செயல்முறையில் சில நேரங்களில், பெண்ணின் கருப்பையகம் சுருங்கியும் விரிந்தும் கொடுக்கும். இதனால், கர்ப்பப்பையின் உட்சுவரானது உதிர்ந்து, தன்னுடன் இணைந்த கருவை வெளியேற்றும். இவ்வாறு நடக்கும் பொழுது அதிமான அளவில் இரத்தப் போக்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இரண்டு வாரங்கள் வரை இந்நிலை நீடிக்கும் என்றும் கூறுகின்றனர்.
- இடுப்பு வலி மற்றும் கோளாறுகள்
மாதவிடாய் காலங்களில் ஏற்படக் கூடிய இடுப்பு வலியைக் காட்டிலும், கருக்கலைப்பு மேற்கொண்ட பிறகு இடுப்பு வலியானது அதிகமாகவே இருக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவர்.
கருக்கலைப்பினால் ஏற்படும் சிக்கல்கள் அல்லது ஆபத்துகள் - Risks or complications of abortion in Tamil
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போல, மருத்துவமனையில் மருத்துவரின் மேற்பார்வையில் நடத்தப்படும் கர்ப்பப்பையின் செயல்பாடுகளால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் ஒரு சில நேரங்களில் மிகவும் கடுமையான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமா இருக்கும். அவை யாதென கீழே காணலாம்
- கருக்கலைப்பின் போது எஞ்சிய கருவின் பகுதிகள்
சில சந்தர்ப்பங்களில், கருக்கலைப்பு செயல்முறைகளை மேற்கொள்ளும்பொழுது, கருவானது கருப்பையின் சுவற்றில் இருந்து முழுமையாக பிரிந்து வராது. இந்த நிலையை முழுமையற்ற கருக்கலைப்பு என்று கூறுகின்றனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், மேலும் சில மருத்துவம் செய்து அவற்றை வெளியேற்ற வேண்டி உள்ளது. அல்லது அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்ற வேண்டி இருக்கும்.
- தொற்று நோய்கள்
அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் கருக்கலைப்பு செயல்பாட்டினால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. நுண்ணுயிர் கொல்லிகளான ஆன்டிபயோடிக்ஸ் மற்றும் வலி நிவாரணிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்து தொற்றுக்களை நீக்குவார்கள்.
- உறுப்புகளுக்கு ஏற்படும் சேதாரங்கள்
கருக்கலைப்பு செயல்பாடுகளால், ஓரிரு சந்தர்ப்பங்களில் கருப்பை வாய் மற்றும் கருப்பைக்கு ஏதேனும் பாதிப்புகள் நேர வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு பாதிப்புகள் நேருமானால் மருத்துவர் மேலும் ஒரு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பார். அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து சேதாரங்களை சரி செய்ய வேண்டி இருக்கும்.
- அதிகமான இரத்த இழப்பு
மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகியும் இரத்தப்போக்கு நீங்காத நிலை ஏற்பட்டால், அது இரத்த சோகை எனும் நோய்க்கு வழிவகுக்கும். அச்சமயங்களில், மருத்துவர் இரத்தமாற்றம் செய்வதற்கு அறிவுறுத்துவார். இரத்தமாற்றம் செய்து பெண்ணின் ஆரோக்கியத்தை முன் நிலைக்கு திரும்பி கொண்டுவருவது மிக முக்கியம் ஆகும்.
கருக்கலைப்புக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் - Chances of getting pregnant after abortion in Tamil
தூண்டப்பட்ட கருக்கலைப்பு செய்த பிறகு, அது எந்த விதத்திலும் மீண்டும் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்காது. மேலும், கருக்கலைப்பு செயல்முறைகள் நடத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே மீண்டும் கர்ப்பம் ஆகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் ஒரு பெண்மைப் பிணியியல் மருத்துவரை அணுகி சரியான கருத்தடை முறை எது என்பதை அறிந்து கொள்வது நல்லது. இது தேவையற்ற கர்ப்பத்தையும், அதன் பின் வரும் தேவையற்ற கருகலைப்பையும் தவிர்க்க உதவும்.
இவ்வாறு தேவையற்ற கருக்கலைப்பை அடிக்கடி செய்யும் பொழுது, பிற்காலத்தில் கருச்சிதைவு உண்டாக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, உடலை முழுப் பரிசோதனை செய்து கொண்டு, உடலில் உள்ள மருத்துவ ரீதியான கோளாறுகளுக்கு தக்க சிகிச்சை அளிப்பதே ஒரு நல்ல ஆரோக்கியமான கர்ப்பத்தை உருவாக்க உறுதுணையாக இருக்கும். எனவே தக்க தருணங்களில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும்.
கருக்கலைப்பு பற்றிய இந்திய சட்டம் - Indian law on abortion in Tamil
கர்ப்பத்தின் மருத்துவ முடிவு சட்டம், 1971, மூன்றாம் பிரிவின் கீழ், கருக்கலைப்பு ஒரு சில காரணங்களுக்கு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்பது சட்டம் ஆகும். அவை யாதென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது
- வயிற்றில் உள்ள கர்ப்பத்தைத் தொடர்ந்தால், கருவை சுமக்கும் தாய்க்கு உடல் ரீதியான ஆபத்துகள் வர வாய்ப்பு உள்ளது
- பிறக்கும் குழந்தை உடல் அல்லது மனநல கோளாறுகளுடன் பிறக்குமானால் அப்பொழுது கருக்கலைப்பு மேற்கொள்ளலாம்
- கர்ப்பமாக இருக்கும் பெண் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஆக இருப்பின் அல்லது கற்பழிப்பு போன்ற குற்றங்களின் காரணமாக கரு உருவாகி இருந்தால்
மேலே கூறப்பட்ட காரணங்களுக்கு கருக்கலைப்பு செய்ய இந்திய சட்டம் அனுமதி கொடுக்கும். சமீபத்தில், கற்பழிப்பு காரணமாக உருவான கருவை கலைக்க 24 வாரங்கள் நேர வரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் பீனல் கோட், பிரிவு 312 - 315 படி சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு மேற்கொள்ளும் நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் சில நேரங்களில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
பாலியல் தேர்வு கருக்கலைப்பு ( அதாவது கருவில் இருக்கும் குழந்தை பெண்ணாக இருப்பின் அதனை கருக்கலைப்பு செய்தல் ) செயல்முறையில் ஈடுபடும் தம்பதியினருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் மேலும் சில நேரங்களில் அபராதமும் விதிக்கப்படுகிறது.
நகரின் Obstetrician and Gynaecologist தேடல்
- Obstetrician and Gynaecologist in Bangalore
- Obstetrician and Gynaecologist in Mumbai
- Obstetrician and Gynaecologist in Ghaziabad
- Obstetrician and Gynaecologist in Chennai
- Obstetrician and Gynaecologist in Pune
- Obstetrician and Gynaecologist in Delhi
- Obstetrician and Gynaecologist in Hyderabad
- Obstetrician and Gynaecologist in New Delhi
- Obstetrician and Gynaecologist in Gwalior
- Obstetrician and Gynaecologist in Gurgaon
கருக்கலைப்பு: வகைகள், காரணங்கள், மாத்திரைகள், செயல்முறைகள் மற்றும் பக்க விளைவுகள் டாக்டர்கள்

Dr. Ayushi Gandhi
Obstetrics & Gynaecology
4 Years of Experience

Dr. Anjali
Obstetrics & Gynaecology
23 Years of Experience

Dr.Anuja Ojha
Obstetrics & Gynaecology
20 Years of Experience

Dr. Geeta Kulkarni
Obstetrics & Gynaecology
7 Years of Experience
மேற்கோள்கள்
- Elisabeth Clare Larsen et al. New insights into mechanisms behind miscarriage. BMC Med. 2013; 11: 154. PMID: 23803387
- Tae Yeong Choi et al. Spontaneous abortion and recurrent miscarriage: A comparison of cytogenetic diagnosis in 250 cases. Obstet Gynecol Sci. 2014 Nov; 57(6): 518–525. PMID: 25469342
- Margreet Wieringa-de Waard et al. The natural course of spontaneous miscarriage: analysis of signs and symptoms in 188 expectantly managed women. Br J Gen Pract. 2003 Sep; 53(494): 704–708. PMID: 15103878
- National Health Service [Internet]. UK; Abortion.
- American College of Obstetricians and Gynecologists [Internet] Washington, DC; Induced Abortion
- National Health Service [Internet]. UK; Abortion.